Monday, February 13, 2012

யாதும் காதலே !!!!

முட்டாள்தனத்தின்
ரகசிய பெட்டகமே!

அவிழ்க்க இயலாத
பாலினத்தின் முடிச்சுகளே!

தனிமை துயரின்
தாழ் நீக்கிய மாயையே!

சௌகர்யத்தின்
சகலமே!

ஆதாம் முதல்
அம்மாவாசை வரை
கடித்த ஆப்பிளே!

மீண்டுமொருமுறை
கிடைத்தால் கொடுத்துவிடு
ஏவாளிடம்..

பாவம் !

எத்தனை முறை
ஆதாம் மட்டுமே
கவிதை எழுதுவது.

யாதும் காதலே !!!!

தூக்கமற்ற நேற்றிரவில் ...

பூ போட்ட தாவணி வாசத்தால்
மூழ்கியிருந்தது அவ்வகுப்பறை.

பருவப்பயிர்களை உடல்மொழியால்
மேய்ந்துகொண்டிருந்தன தாவணி ஆடுகள்.

முதல் முத்தத்தால்
அறிந்து கொண்ட மௌனம்.

தீண்டப்பட்ட விரல்களில்
மறைந்திருந்த மர்மங்கள்.

பார்வையற்ற பறவைகளாய்
அந்தரங்க வானில் பறந்துகொண்டிருந்த
பால்யத்தின் பிழைகள்.

பிழைகளை திருந்தச் செய்ய
நீண்டுகொண்டிருந்த தனிமையின் காலம்.

கூடி முயங்கவும் இல்லை,
ஊடலும் இல்லை.

தனிமையின் தாழ் நீக்கிய
பருவத்தின் வாசம்.

ஏதோ ஒன்றை வீசிவிட்டு போன
பால் பார்வையின் ஸ்பரிசம்.

இன்றுவரை கிடைக்காத
பருவத்திற்கான விடைகள்.

உடல் தீண்டவே விருப்பமிருந்தும்
உன்னதமென்று பெயர்ச் சூட்டிக்கொண்டோம்.

போதை மழையில் ஆயிரம்
சுக வேளைகள்.

மீண்டுமொருமுறை கிடைக்குமோ
பிழைகளை சரிசெய்வதற்கான
தனிமையும் பருவமும்.