Wednesday, July 31, 2013

”வாட்ச்மேன் கருப்பன் தாத்தா”...!!!

கருப்பன் , என்று உதவி தலைமையாசிரியர் அழைத்ததுமே எங்களுக்குள் பரவசம் தொற்றிக்கொள்ளும்.கருப்பன் என்ற சொல்லுக்கா இத்தனை விசேசம். இல்லை , இது அவர் கொண்டுவரவிருக்கும் சுற்றறிக்கைகாக(circular).பால்யமும் , பிழைகளும் ஒன்றாக பயணித்த காலங்கள் அவை.
காதல் என்ற வாழ்க்கைக்காக ஒவ்வொரு நாளும் அலைந்த வருடங்கள் அவை. யார் இந்த கருப்பன்.? நான் படித்த போதே அறுபது வயதை கடந்து விட்ட மனிதர்.நாளை விடுமுறை என்றால் இன்றே நாங்கள் தெரிந்து கொள்வது கருப்பன் தாத்தா மூலமாகத்தான்.நாங்கள் அவரை அப்பிடித்தான் அழைப்போம்.”வாட்ச்மேன் கருப்பன் தாத்தா”.மூன்று  தலைமுறை மாணவர்களை கண்டவர்.நாங்கள் படித்த பள்ளி அடிக்கல் நாட்டிய நாளிலிருந்து அந்த பள்ளியில் வேலை செய்தவர்.இவர் வெறும் வாட்ச்மேன் மட்டும் இல்லை, இவர் இந்த பள்ளிக்காக , ஆசிரியர்களுக்காக எவ்வளவோ உழைத்திருக்கிறார்.இவர் பள்ளியில் அயர்ந்து தூங்கியதை நான் பார்த்தது இல்லை.இவரை காவலுக்கு வைத்து விட்டு பல ஆசிரியர்கள் உறங்கி இருக்கிறார்கள், தலைமையாசிரியர் வருவதை கண்காணித்து சொல்ல.கருப்பன் தாத்தா சுற்றறிக்கை கொண்டுவருவது அரைமணி நேரத்தில் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தெரிந்துவிடும்.பெரும்பாலும் அவர் கொண்டுவருவது நாளைய விடுமுறை பற்றியதாகவே இருக்கும்.சிலநேரங்களில் அனைத்து மாணவர்களும் கொடிநாளை முன்னிட்டு தலைக்கு 2 ருபாய் தரவேண்டும் என்ற சோகமான தவல்களையும் கொண்டுவருவார்.அனைத்து மாணவர்களும் காலையில் தமிழ் தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருக்க,எங்கோ ஒரு மூலையில் காக்கைக்கு சோறு போட்டுக்கொண்டிருப்பார்.இதை பலமுறை நான் பார்த்ததுண்டு.எங்களுக்கு தமிழ் தாய் வாழ்த்து, அவருக்கோ காக்கைகளின் பசி.கனவுகளுக்கு பின்னால் செல்லாமல் காலத்திற்கு பின்னால் சென்ற படிக்காத எளிமையான மனிதர்.கணக்கு டீச்சர் சந்தியா(உதவி தலைமையாசிரியர்) வருகிறார் என்றால் அனைத்து மாணவர்களும் மூச்சை நிறுத்தி அமைதியாக இருப்பார்கள்.இவர் மட்டும் வெத்தலை இடித்துக்கொண்டு அவரை பார்ப்பார்..வேலை நேரத்துல எங்க போனீங்க என்று சந்தியா டீச்சர் ஏதேனும் திட்டினால் ,அவர்தான் வாங்கிட்டு வரச்சொன்னாரு, ஹோடேல்லுக்கு போய் என்று தன்னை வேலை வாங்கிய வாத்தியாரை தயங்காமல் போட்டுகொடுப்பார்.சந்தியா டீச்சரின் ஞானம் அவரிடம் பலமுறை சமாதானம் ஆவதை , நாங்கள் ரசித்ததுண்டு.இவர் நடந்து பதித்த இடங்களின் மிச்சத்தில்தான் நாங்கள் பாடம் கற்றோம்.இவர் உட்புகாத வகுப்பறை அன்றுதான் கட்ட துவங்கி இருக்க வேண்டும். ஆசிரியர் யாருடைய வீட்டிலாவது துயர் சம்பவம் நடந்துவிட்டால் ,மற்ற ஆசரியர்களுக்கு முன்பாக இவர் அங்கு இருப்பார்.இவர் ஒரு போதும் ஆறுதல் சொல்லியதில்லை.ஆனாலும் இவர் அங்கு இருப்பார்.பின்வரும் ஆசிரியர்கள் ,கருப்பா இங்கேயே இருந்து வேணுங்கறது செய்ங்க ..என்று சொல்லிவிட்டு செல்வார்கள்.இவர் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டுவார்.இவர் பார்த்து வளர்ந்து நரைத்து,உயிர் விட்ட பழைய மாணவர்கள் நிறைய பேர் உண்டு.உங்க அப்பன் படிக்கிறப்ப எனக்கு அப்பப்ப காசு தருவான் என்று , இறந்தவரின் மகனிடம் பழைய நினைவுகளை பறக்க விடுவார்.அன்றைக்கு மட்டும் ஏனோ அவரிடம் சாராய நெடி அடிக்கும்.இவராக எந்த மாணவரிடத்திலும் காசு கேட்டது இல்லை.அவர்களாக பிரயப்பட்டு கொடுத்தால் சிரித்துக்கொண்டே வாங்கிகொள்வார்.இவருக்கும் , மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என்ன உறவு?காலம் மனிதர்களை எப்பொழுதும் பதுக்கிக் கொள்கிறது.அதன் மூலமாகத்தான் காலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.எங்கள் பள்ளியை சுற்றி உள்ள நான்கு கிராமங்களின் அப்பன்களுக்கும் ,தாத்தாக்களுக்கும் ,பேரன்களுக்கும் இவரை தெரியும்.இவர் பார்க்கவே காலமும், இந்த பள்ளியின் வடிவமும் மாறத்தொடங்கின. இப்பொழுது கிராமங்கள் முழு கிராமங்களாக இல்லை.நான் பள்ளி படிப்பு முடித்து விட்டு சென்னை வந்துவிட்டேன்.நான் படித்த வரை இருபாலர் பள்ளியாகவே இருந்தது.பிறகு சில வருடங்க்ள கழித்து ஆண்களுக்கு என்றும் , பெண்களுக்கென்றும் தனித்தனியாக பிரிந்தது.பாவம் இன்றைய மாணவர்கள்.அவர்களின் ஏக்கம் புரிகிறது.மாணவர் பருவத்தில் பெண்ணின் வாசமும் , தோழமையும் இல்லாமல் இருப்பது கணிதத்தை விட கொடுமையானதொரு உணர்வு.இருந்தாலும் காலத்திற்கு ஏற்றவாறு காதலும் , காதலை சொல்லும் விதமும் மாறிவிட்டது.நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியேறிய சில காலங்களில் கருப்பன் தாத்தாவும் ஓய்வு பெற்றுவிட்டதாக நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.இவர் பார்க்காத காதல் புறாக்கள் இல்லை,இவர்  பார்க்காத ஆசிரியர் காதல்களும் இல்லை.ஆனால் ஒருபோதும் அவர் அதை வெளியில் சொன்னது இல்லை.காரணம், அவர்கள் அல்ல,நான் படித்த பள்ளி.இந்த பள்ளியில்தான் தன்னுடைய 40 வருடத்தை கடத்தியிருக்கிறார்.எத்தனை மாணவர்கள்,எத்தனை ஆசிரியர்கள்,எத்தனை முகங்கள் ,எத்தனை காலமாற்றங்கள்.,இப்படி ஆயிரமாயிரம் நினைவுகளை இந்த பள்ளியைப் போல இவரும் சுமந்துகொண்டேதான் இருக்கிறார்.கடந்தவாரம் நண்பனின் தங்கை திருமணத்திற்காக
ஊருக்கு சென்றிருந்தேன்.அப்பொழுது தற்செயலாக கருப்பன் தாத்தாவை எதிரில் பார்த்தேன்.படித்த காலத்தில் பார்த்த அதே தேகம் ,அதே சிரிப்பு ,அதே நடை,அதே காக்கி சட்டை.பார்த்த அடுத்த நொடி என்னுடைய பள்ளியின் அத்தனை நினைவுகளும் ஒரு நிமிடம் மின்னல் போல் வந்து போனது.சந்தியா டீச்சர், பச்சமுத்து இயற்பியல் ஆசிரியர்,மோகன் வாத்தியார்,பொன்னன் தமிழ் அய்யா,அறிவுராணி டீச்சர் ,சாந்தி டீச்சர்,என்னுடைய முதல் காதல் உட்பட அத்தனை நினைவுகளும் வந்தன.சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று நான் ஒரு ஒளிப்பதிவாளனாக இருப்பதை எண்ணி அந்த ஒரு நிமிடம் சந்தோசம் கொண்டேன்.
கையில் இருந்த ஐம்பது ரூபாயை அவருக்கு கொடுத்தேன்.சிறிது நேரம் பேசிக்கொண்டே இருந்த போது ,தனக்கு வரவேண்டிய ஓய்வுதிய பணம் இப்பொழுது வருவதில்லை என்று சொன்னார்.ஏன் என்று கேட்டேன்..?யாரோ நான் இறந்து விட்டதாக சொல்லி தனக்கு வரவேண்டிய பணத்தை நிறுத்தி விட்டதாகவும் , இப்பொழுது அதற்காகத்தான் அலைந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.இதை கேட்ட அடுத்த நொடி மனம் கனத்து போனது.இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் எத்தனை முறைதான் நாம் இழந்துகொண்டே இருப்பது.
மனிதர்களை அரித்துக்கொண்டே இருக்கும் கரையான்களை என்ன செய்வது.என்ன சொல்லி கருப்பன் தாத்தாவை சமாதானம் செய்வேன்.ஆயிரமாயிரம் முகங்களை பார்த்த அவரின் முகத்தை பார்க்க முடியவில்லை என்னால்.இது போன்ற கருப்பன் தாத்தாக்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு.அவர்களுக்கு எல்லாம் என்ன நடக்கிறது.இன்னும் எத்தனை கருப்பன் தாத்தாகளை இந்த சமூகம் சாகடிக்கப் போகிறது.கனத்த மனதோடு சென்னை வந்து சேர்ந்தேன்.இன்னும் பாரம் குறையவில்லை.குறையவும் போவதில்லை.நாளையின் மீதொரு நம்பிக்கை வைக்க ஏதேனும் நிகழ்ந்தால் நன்று.

வாழ்க பாரதம்..!!


காதலியும் , கருப்பு குடையும்..!!

குடை நனையாமல் இருக்க ,
குடைக்குள்
பெய்து கொண்டிருகிறாள்
என் காதலி..!!

Thursday, July 25, 2013

மழையோடு மழை..!!

மழைக்கு ஒதுங்கிய மழையாகவே 
அவள் இருந்தாள்.

மழை நின்ற பின்னும் 
பொழிந்து கொண்டே இருக்கிறாள்..!!

மனம்..!!

அமர்ந்த இடத்திலிருந்தே 
பறந்து கொண்டிருக்குது 
மனப் பறவை..!!

Monday, July 22, 2013

ஒரு கோப்பை மனம்..!!

காற்றில் அசையும் தீபம்,
காற்றையும் அசைக்கிறது..!!

ஒரு கோப்பை காதல்..!!

என் உடைந்த கோப்பையிலும் ,
நீ ஒழுகாமலேயே இருக்கிறாய்..!!

மழைத்துளி அவள்மேல் விழ ,
அவளும் மழையாகவே பொழிகிறாள்..!!

Tuesday, July 16, 2013

ஒரு கோப்பை வானம்..!!

உறங்கிவிட்டன குருவிகள் , 
பறக்கத் தொடங்கியது கூடு..!! 

விழித்துக் கொண்டன குருவிகள், 
கூடு உறங்குகிறது..!!


ஒரு கோப்பை காதல்..!!

களைந்து கிடக்கும் 
துணிகளுக்கு ஓரத்தில் 
பறந்துக் கொண்டிருக்குது , 
நீ கைக் குட்டையில் 
வரைந்த பட்டாம்பூச்சி..!! 


நீ 
மழையல்ல, 
உனைகண்டு ஒதுங்கி நிற்க. 
நீ 
வானம் 
உனதடியில் தான் 
எனது அண்டம்.


ஒரு கோப்பை காதல்..!!

நீ உறங்க விடாத 
என் இரவுகளை, 
உறங்க விடாமலேயே 
ரசிக்கிறேன்..!! 

நதியில் தேடிய 
தீயாகவே 
நீ இருந்தாய்..!! 

ஒரு போதும் உதிராத 
விழிப்பூ நீயடி..!! 

காலம் துடைத்து விட்டு போன 
இளமையடி நீ..!! 

பனித் துளியில் 
விழாத வானம் நீ..!! 

கடல் நீரில் தென்படும் 
கானல் நீ..!! 

இலையோடு அசைந்து கொண்டிருக்கும் 
காற்று நீ..!! 

விலகிச் சென்ற 
வீணையடி நீ..!! 

நெருக்கத்தில் திணறிப் போகும் 
காற்றும் நீயடி..!! 

உன் மேல் விழுந்த பூவை விடுத்து, 
உனைத் தேடி அலையுது சிட்டுக் குருவி..!! 

நீ தீண்ட, 
புகை கண்டு ஓடும் 
பெருச்சாளி ஆனேன்..!!


ரயில்வே கேட் ஆயா..!!!

மறந்தே போச்சி என்று சொல்லும் எந்தவொரு மனிதனும்  ஒருபோதும் மறப்பதே இல்லை தங்கள் வாழ்வில், நினைவில்பதிந்துபோனஞாபகங்களை, மனிதர்களை.
அப்படி ஒருபோதும்  மறக்க முடியாத ஒருத்தியாக என் வாழ்வில் நிறைந்து போனவள்தான், இந்த ரயில்வே கேட் ஆயா.

யார் இந்த ஆயா..?இவருக்கும் எனக்கும் என்ன உறவு.
என் பால்யத்தின் நினைவுகளை,தன் அன்பால் தூக்கித் திரிந்தவள்.காலைகடனுக்கு கூட்டிச் செல்வது முதல் , மாலை ஊட்டி வருக்கி வாங்கித் தருவது வரை என் அருகிலேயே இருந்தவள் .எனது அழுகையை ஒரே ஒரு முத்தத்தால் நிறுத்தியவள்.தனது வெந்து போன சுண்ணாம்பு விரல்களால் எனக்கு மை பூசி அழகு பார்த்தவள்.எனது சமீபத்திய நினைவுகளில் அடிக்கடி சிரிப்பினை வீசுபவள்.எனக்காக பரிசளிக்க பித்தளை மோதிரத்தை அணிந்து வரும் இளைத்த நிழல் அவள். எனது தந்தையின் வழி தூரத்துச் சொந்தம் என்று அம்மா சொல்ல அவரை பற்றி அறிந்து கொண்டேன்.எனது அம்மாவின் வழி தாத்தா , பாட்டியும் ,அப்பாவின் வழி தாத்தா,ஆயாவும்
நான் பிறப்பதற்கு முன்பாகவே பிறவிப் பயன் அடைந்து விட்டார்கள்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் எனக்கு ரயில்வே கேட் ஆயாவை மட்டும்தான் தெரியும்.என்னுடைய கிராமத்தில் இருந்து ஐந்து கிராமங்கள் தள்ளி இருக்கும் பொன்னம்மாபேட்டை என்ற கிராமத்திற்கும் , நகரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில , தனது 10*6 சதுரடி குடிசையில் வாழ்ந்து கொண்டிருப்பவள்.
எழுபது வயதை கடந்துவிட்ட ,எனது பால்ய நினைவுகளின் தேவதை அவள் .தொலைப்பேசியில் பேரன்களின் குரலை கேட்டுக் கொண்டிருக்கும் பாட்டிகளை விட,பேராண்டிகளின் ஆயினை துடைத்துக் கொண்டிருக்கும் ஆயாக்களின் உலகம் பெரிது.அப்படிப்பட்ட ஆயாவாக என் உலகத்தில் நிறைந்து போனவள்.நான் விழித்துக் கொண்டிருக்கும் போது எனை பார்க்க வரும் ஆயா , நான் உறங்கிய பிறகுதான் தன் வீடு திரும்புவாள்.
வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து தரும் தொழில் செய்து வந்தவள். அத்தொழில் செய்வது எவ்வளவு கடினம் என்பதை அவரை பார்த்துதான் அறிந்து கொண்டேன்.சுண்ணாம்புத் துளி விழுந்தே சிவந்து போன அவளின் கண்களில் வழிந்து கொண்டே இருந்த கண்ணீர் துளிகள், இன்றும் ஒழுக்கிக் கொண்டேதான் இருக்கிறது என் நினைவுகளில். என் வாழ்வில் நான் விரும்பிய ஒரே ஒரு  ஆயாவாக அவள் மட்டுமே இருந்தாள் , இருக்கிறாள். ஒவ்வொரு முறை எனை காண வரும்போதெல்லாம் , நான் விரும்பும் இனிப்பு பாக்கினை எனக்காக வாங்கி வந்தவள்.அவளது மடியிலேயே அமர்ந்து , சிரித்து , விளையாட ,தன் நீண்ட பெரும்மூச்சினை எனக்காக தந்தவள்.பட்டாம் பூச்சியாய் அவள் மேல் அமர்ந்து தட்டான் (தும்பி) பிடித்த நாட்கள்,எனை இன்றும் சிறுவனாகவே உணரச் செய்கிறது.ஒரு போதும் சாயம் இழக்காத வானவில்லாக தோன்றிக் கொண்டே இருக்கிறாள் ரயில்வே கேட் ஆயா.படங்களின் மேல் தீராத காதல் கொண்டவள்.எனை பார்க்க வரும்போதெல்லாம் ஆயிரம் திரைப் படங்களோடு வந்தவள்.
தன் கதையோடு , திரைக் கதைகளையும் சேர்த்து, இன்றும் ஓடிக் கொண்டே இருக்கிறாள் முடிவில்லாமல். தான் முதன் முதலாக எம்.ஜி.ஆரை பார்த்ததை அடிக்கடி சொல்லி சொல்லி தன்  நினைவுகளை பகிர்ந்து கொண்டு, மேலும் மேலும் எம்.ஜி.ஆரை சிவப்பாக்கியவள். .அன்று முதல் இன்று வரை வெளியாகும் அத்தனை படங்களையும் முதல் ஆளாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவள் .விசி தம்பி நல்லா ஆடுது , அசீது தம்பி சுண்ணாம்பு மாதிரி வெள்ளையா இருக்கு ,இப்படி வர்ணித்து வர்ணித்து தனது வாழ்வை திரைப்படங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவள்.அவருடன் சேர்ந்து ஒரு படம் கூட பார்க்கவில்லையே என்ற ஏக்கம் இன்றும் எனக்கு உண்டு.
மனிதன் திரையில் பார்க்காத படங்களை தன் வாழ்விலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறான்.ஒருபோதும் அத்திரை கிழிவதே இல்லை.
ஆயாவை கட்டிக் கொண்டு விளையாடும் போதெல்லாம்,அவருக்கு இருக்கும் காச நோய் எனக்கும் தொற்றிக் கொள்ள கூடாது என்பதற்காக , சாடையாக அவரை திட்டும் சொந்தங்களின் பேச்சால், தனக்கு விருப்பம் இல்லாமலேயே கண்ணீரோடு எனைவிட்டு விலகிச் சென்றவள்.
அட மானுடமே, அழிந்து போகும் மனிதர்களுக்குத்தான் காச நோய் , அன்பிற்கு ஒருபோதும் இல்லை.

    வயது மாற்றத்தால், இட மாற்றத்தால், கால மாற்றத்தால் , இப்படி பல்வேறு மாற்றங்களால் நம்முடைய நினைவுகள் தேய்ந்து போகுமே தவிர, ஒரு போதும் அழிந்து போகாது.விவேக் என்ற என் பெயரை விவேக்கு என்று அவளால் மட்டுமே அழைத்திட முடிந்தது.அவளது வீட்டுக்கு அருகில் இருக்கும் ரயில்வே கேட்  கிராசிங்( railway gate crossing)தான் இன்றளவும் அவளது நினைவுகளை தனது தண்டவாளத்தோடு சேர்த்து கொண்டுள்ளது.

    எனக்கு முனியம்மாவை ஒருபோதும் தெரியாது. எப்பொழுதும் அவள் ரயில்வே கேட் ஆயா தான் எனக்கு.  கடைசியாக ஆயாவை பார்த்து,இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. மீண்டும் பார்க்க சீக்கிரம் ஊருக்கு செல்வேன்.அதுவரை உனது முதுமை  நினைவிலிருந்து எனை நீக்காமல் வைத்திருப்பாயா ஆயா..?

ஒருபோதும் அமராத பறவையாக பறந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை.நீண்ட நெடும்பயணத்தில் அது மனிதர்களை மட்டுமே விழுங்குகிறது,நினைவுகளை அல்ல.பறவையினுள் அடைபட்ட வானமாய் நம் நினைவுகள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.ஆயிரமாயிரம் முகங்கள் ,ஆயாவாக , தாத்தாவாக,வாட்ச் மேனாக ,டி கடை சிறுவனாக,ஸ்கூல் டீச்சராக,இறந்து போன நண்பனாக,பிரிந்து போன காதலியாக இப்படி யார் யாராகவோ நிறைந்து கொண்டே இருக்கிறார்கள் நம் வாழ்வில்.

ஒரு போதும் நிரம்பாத கோப்பையாக வாழ்க்கை இருக்கிறது.
நினைவுகளை பருகாத உயிராக மனிதன் இருக்கிறான்.

Wednesday, July 10, 2013

ஒரு கோப்பை காதல் ..!!

தேகம் எங்கும் கண்கள் விதைத்து- என் 
நாணத்தை மூடச் செய்யும்
பார்வை அவளுக்கு.

பட்டாம் பூச்சியின் சிறகை கீறி
வர்ணம் பூசிக் கொள்ளும் 
வானவில் பூச்சி அவள்.

தண்டவாள கண்களில்
சத்தமில்லாமல் நகரும்
தாவணி ரயில் அவள்.

இலை நரம்பினில்
மெல்ல ஊரும்
நீர்த்துளி அவள்..!!

சொல்லப் போனால் -அவள்
முடிக்கபடாத கவிதை..!!

ஆதலால் காதல் செய்வீர்..!!

ஒரு கோப்பை மழை ....!!!

சன்னல் வழி சாரலில் 
இலையோடு சேர்ந்து 
நாமும் நனைந்தோம்..!!

யாருமற்ற அறையில்
மழையோடு -நாமும் 
உறங்கினோம்..!!

உன் கண்கள் கொண்டே
விடிந்து கொண்டிருந்தது
நம் அறை..!!

கைபேசி வெளிச்சத்தில்
பிரம்மாண்டமாய் விழுந்தது- நம்
விரல்களின் பிம்பம்..!!

விடியும் வரை
விடாமல் பொழிந்தது
மழை..!!

விட்ட பின்பும் விடாமல்
பொழிந்து கொண்டே இருந்தாய்..!!

உன் சப்த சிணுங்களில்
நின்று போனது கடிகாரம்..!!

கடிகாரம் இல்லா காலம்
ஓடிக் கொண்டே இருந்தது..!!

விடிந்த பின்பு
மழை விட்டது..!!

விடிந்த பின்பும் - நாம்
பொழிந்து கொண்டே இருக்கிறோம்..!!

ஆதலால் காதல் செய்வீர்..!!

ஒரு கோப்பை காதல் ..!!

சிரித்து மயங்கிய அதே பூங்கா..!!

இன்றும் விழுந்த காக்கையின் எச்சம்..!!

இன்று துடைத்துக் கொள்ள ,
இல்லாத உன் கைக்குட்டை..!!

காற்றை தடவிக்கொண்ட உன்
கூந்தல்..!!

தொட்டவுடன் சிணுங்கிக் கொள்ளும் உன் மௌன கண்கள்..!!

இப்படி ஆயிரம் நினைவுகளை சுமக்கிறது ,
இன்று யாருமே அமராத
அந்த மரத்தின் நிழல்..!!

ஒரு கோப்பை வானம்..!!

உன் அடர்ந்த வனத்தில் , 
மழைத்துளியோடு நானும் 
தொலைந்து போனேன்..!!

ஒரு கோப்பை வானம்..!!

பறவையினுள் அடைபட்ட வானம் சிறகாய் அசைகிறது..!!

விடாமல் துரத்திக் கொண்டே இருக்கும் நினைவுகளை , விடாமல் பிடித்துக் கொண்டே இருக்கிறேன்..!!

விழித்துக் கொண்டே இருக்கும் இரவை , உறங்கியபடி தொலைகின்றோம்..!!

செடியிலிருந்து உதிர்ந்ததும் பூ காதலாகிறது ..!!