நகர்ந்தபடி நனைந்து கொண்டிருந்தன
தேங்கிய மழை நீரில் விழுந்த பிம்பங்கள்,
ஒன்று குடையோடும் ,
ஒன்று குழந்தையோடும் ,
ஒன்று தள்ளாடியும் ,
மற்றொன்று நரை கூடியும் ,
இப்படி நீரில் விழும் பிம்பங்கள் ஏராளம்.
ஆனால் நீரே பிம்பமாவது எப்போது.
எத்தனை பிம்பங்கள் விழுந்த பின்னும்
இன்னும் நனையாமல்தான் இருக்கிறது நீர்.
பூக்காரி விட்டுச்சென்ற பூவினை
யாருக்காகவோ கவ்விச் செல்கிறது
பட்டினி நாய்.
கூச்சம் கொண்டு சிரிக்கும் பெண்ணை
கூர்ந்து கவனிக்கிறார் பேருந்து நடத்துனர்.
தனக்கு வயதாகிவிட்டதை எண்ணி
இரண்டாக கிழித்து தருகிறார்
பயணச்சீட்டோடு தன் கோபத்தையும்.
இரண்டு முழப் பூவினை
நான்கு முழமாக கட்டுகிறாள் பூக்காரி.
பூக்காரி கட்டுவதை பூதக் கண்ணாடி
கொண்டு பார்க்கிறாள் மடிசார் மாமி.
கடவுளை காலடியில் வரைந்து காட்டுகிறான் ஒருவன்,
கன்னத்தில் போட்டபடி காலணா வீசிச் செல்கிறான் மற்றொருவன்.
சாலையோர தேவதையை
பேரம் பேசி கூட்டிச்செல்கிறான் ஒருவன்.
அதற்க்கும் வழியில்லாதவன்
பொதுக்கழிப்பறை நோக்கி செல்கிறான்.
ஏதோ ஒன்றை எழுதி கொண்டிருக்கிறான்
உலகின் பிம்பமே தன்மீது விழுந்த தேசாந்திரி.
அரை கோப்பை தேநீர் முடிவதற்குள்
6 சிகரெட் புகைகிறான் ஆறுமுகம்.
ஏழாம் அறிவை பற்றி எட்டு நாட்களாக
பேசிகொண்டிருகிறான் உதவி இயக்குநர்.
ஓசோவையும் , கூடங்குளதையும்
ஒருசேர பேசுகிறார் ஒருவர்.
யாருக்கும் அக்கறை இல்லை – எல்லாம்
POLITICS என்று சொல்கிறார் மற்றொருவர்.
ஒபாமாதான் என்று அடித்து சொல்கிறார் ஒருவர்.
சிக்குன்குனியாவில் ஒருவன்.
சிக்கன் பிரியாணியில் மற்றொருவன்.
இப்படி நீண்டுகொண்டே இருக்கும்
கதைகளை எழுதிக்கொண்டேதான்
இருக்கிறது காலம்.
கதைகள் முடியாமல்
காலமே கதையாகிறது.